Success in my Habit

Sunday, January 3, 2021

வீரத்தின் அடையாளம் கட்டபொம்மன் பிறந்த தினம் இன்று!



இன்றைய ஒட்டபிடாரம் அன்று  அழகிய வீரபாண்டியபுரம் என்ற பெயர்கொண்ட ஊரில் ஆட்சி புரிந்து வந்தவர் ஜெகவீரபாண்டியன். இவரின்  அவையில் அமைச்சராக பொம்மு என்கிற கெட்டி பொம்மு என்பவர் இடம் பெற்றிருந்தார். இவர் ஆந்திர மாநிலம், பெல்லாரியை பூர்வீகமாக கொண்டவர் ஆவர். வீரமிகுந்தவர் என்ற பொருளை தெலுங்கில் பொருள் உணர்த்தும் கெட்டி பொம்மு எனும் சொல் நாளடைவில் கட்டபொம்மு என்று மாறி பின் தமிழில் கட்டபொம்மன் என்ற சொல்லாயிற்று. ஜெக வீரபாண்டியனின் மறைவிற்குப்பின் அரியனை ஏறிய கட்டபொம்மு பின் ஆதி கட்டபொம்மன் என்று மக்களால் அழைக்கப்பட்டார்.

இவரே பொம்மு மரபினரின் முதல் கட்டபொம்மன் ஆவர். இந்த பொம்மு மரபில் வந்தவர்களே  திக்குவிசய கட்டபொம்மன் என்ற ஜெகவீர கட்டபொம்மன், ஆறுமகத்தம்மாள் தம்பதியர். இவர்களின் புதல்வரே வீரபாண்டியன் எனும் இயற்பெயர் கொண்ட வீரபாண்டிய கட்டபொம்மனாவார். இவர் நாயக்க வம்ச அரசாட்சியில் தொடர்ந்து வருவதால் இவர் பொம்மு நாயக்கர் என்று மக்களால் அழைக்கப்பட்டார்.

பிறப்பு:

ஜனவரி 3 ம் நாள் 1760 ஆம் ஆண்டு அன்று ஆறுமுகத்தம்மாள்- திக்குவிசய கட்டபொம்மு தம்பதியருக்கு புதல்வராய் பாஞ்சாலங்குறிச்சியில் பிறந்தவர் வீரபாண்டிய கட்டபொம்மன் ஆவர்.

அரசியல் சுருக்கம்:

பிப்ரவரி மாதம்  2ம் தேதி  1790ஆம் ஆண்டு  அன்று 47-வது பாளையக்காரராகப் பொறுப்பு ஏற்றுக்கொண்டார் கட்டபொம்மன்.

இவரது துணைவியாரின் பெயர் வீரசக்கம்மாள் ஆவர். இவர்களுக்கு வாரிசு  இல்லை. குமாரசாமி என்ற ஊமைத்துரை, மேலும் இவருக்கு துரைச்சிங்கம் என்ற இரு சகோதரர்களும், ஈசுவர வடிவு, துரைக்கண்ணு என்ற இரு சகோதரிகளும் இருந்தனர். இவர் 9 ஆண்டுகள், 8 மாதம், 14 நாட்கள் பாஞ்சாலங்குறிச்சியின் அரசராக பொறுப்பிலிருந்தார்.

வெள்ளையர்களுடன் கட்டபொம்மன்:

கி.பி. 1797-ல் முதன் முதலாக ஆங்கிலேயரான  ஆலன் துரை பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டைக்கு திறை செலுத்துவது தொடர்பாக  வந்தார். இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்த கட்டபொம்மனுடன் 1797- 1798-ல் நடந்த முதல் போரில் வீரபாண்டிய கட்டபொம்மனிடம் ஆலன் துரை தோற்று ஓடினார். அதன் பின்னர் நெல்லை மாவட்டக் கலெக்டர் ஜாக்சன் வீரபாண்டிய கட்ட பொம்மனைச் சந்திக்க அழைத்தார். கட்டபொம்மனை அவமானப்படுத்த நினைத்து வேண்டுமென்றே பல இடங்களுக்கு சென்று கட்டபொம்மனை அலைக்கழித்தார். இறுதியில் செப்டம்பர் 10ம் நாள்  1798ம் ஆண்டு  இராமநாதபுரத்தில் சந்தித்தார். அப்போது தந்திரத்தால் வீரபாண்டிய கட்டபொம்மனைக் கைது செய்ய முயன்றார். அதை முறியடித்து வீரபாண்டியக் கட்டபொம்மன் பாஞ்சாலங்குறிச்சியை வந்தடைந்தார்.அவரது அமைச்சர் சுப்பிரமணியம் மட்டும் கைது செய்யப்பட்டார். பின் மீண்டும் செப்டம்பர் 5, 1799-ல் பானர்மென் என்ற ஆங்கிலேயத் தளபதியால் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை முற்றுகையிடப்பட்டது. அங்கு கடும் போர் நடைபெற்றது.

போரில் பல ஆங்கிலேயர்கள் உயிரிழந்தனர். பின் செப்டம்பர் 9ம் நாள்  1799-ல் ஆங்கிலேயர்களால் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை கைப்பற்றப்பட்டது. அக்டோபர் 1, 1799-ல் புதுக்கோட்டை மன்னர் விஜயரகுநாத தொண்டமானால் வீரபாண்டிய கட்டபொம்மன் கைது செய்யப்பட்டு கிழக்கிந்திய கம்பெனியிடம்  ஒப்படைக்கப்பட்டார். அக்டோபர் 16 1799-ல் ஆங்கிலேயத் தளபதி பேனர்மேன் ஆணைப்படி கயத்தாற்றில் தூக்கிலிடப்பட்டார்.இந்த ஆங்கிலேயரை எதிர்த்த இந்த ஆன்மகனின் பிறந்த தினத்தில் இவரின் நாட்டுப்பற்றை நினைவு கூருவோம்.

 

No comments: